சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை நீடிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு 815 பக்க தீர்ப்பை வழங்கியது. நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும். ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் வழக்கு தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த தீர்ப்பு குறித்து அரசியல் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை நீடிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உரியது. இது, தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கும், தியாகத்திற்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும்.சட்டத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பில் எந்தவித மாற்றமும் வந்துவிடாத அளவுக்குத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை சட்டப்படி நிரந்தரமாக மூடும் வரை தமிழக அரசு எல்லா நிலைகளிலும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.