சென்னை: சென்னை ஐ.ஐ.டி. வளாகம் உள்ளிட்ட 8 இடங்களில் இலவச டிஜிட்டல் பத்திரிகை வசதியை மாநகராட்சி ஏற்படுத்தி உள்ளது. கொரோனா அறிகுறி இல்லாமல் தொற்று உள்ளவர்கள் ‘கோவிட்’ பாதுகாப்பு மையங்களிலும், தனிமைப்படுத்தும் மையங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினந்தோறும் செய்திகளை அறிந்து கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிட் பாதுகாப்பு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இங்குள்ள நோயாளிகள் மற்றும் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் நாள்தோறும் செய்திகள் தெரிந்து கொள்ள தனியார் இணைய செய்தி வாசிப்பு நிறுவனத்துடன் இணைந்து 5 ஆயிரத்துக் கும் மேற்பட்ட பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களை இலவச மற்றும் அளவற்ற எண்ணிக்கையில் படித்து பயன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை, கொரோனா கட்டுப்பாட்டு மையம், சென்னை ஐ.ஐ.டி. வளாகம் உள்ளிட்ட 8 இடங்களில் இந்த இலவச டிஜிட்டல் பத்திரிகை வசதியை மாநகராட்சி ஏற்படுத்தி உள்ளது. மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள இந்த தொடுதலற்ற, தொடர்பு இல்லாத மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற சேவை தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் மன உறுதியை அதிகரிக்கும்.