சென்னை: மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்ள உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 1,16,650 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அதில் 1,02,698 பேர் குணமடைந்துள்ளனர். 2454 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போது 11,498 மருத்துவமனையில் உள்ளனர். இவர்களில் தீவிர அறிகுறி, லேசான அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனைகளிலும், அறிகுறி இல்லாதவர்கள் கோவிட் கேர் மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை தொடர்பான தகவல் அவர்களது குடும்பத்தினர் அறிய உதவி எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். இதன்படி ஓமந்தூரார், ராஜிவ் காந்தி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி உள்ளிட்ட நான்கு மருத்துவமனைகளுக்கும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த எண்ணை தொடர்பு கொண்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல் நிலை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
* மருத்துவமனை உதவி எண்
ஓமந்தூரார்: 94999 66103
ராஜீவ் காந்தி: 78258 84974
கீழ்ப்பாக்கம்: 044-28364964,28364965
ஸ்டான்லி: 044-25281350