மதுரை: அரசியலில் கமல் எல்கேஜியில் கூட சேரவில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று அளித்த பேட்டியில், சென்னை தலைநகராக இருந்தாலும், அரசியல் தலைநகரமாக மதுரை திகழ்கிறது, திருச்சியை தலைமையிடமாக எம்ஜிஆர் அறிவிக்க முயன்றபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின் மதுரையை 2வது தலைநகராக மாற்ற விரும்பினார். ஜெயலலிதா அரசியல் சார்ந்த முடிவுகளை மதுரையில் வைத்தே எடுப்பார், எம்ஜிஆர், ஜெயலலிதா வலியுறுத்திய கருத்தையே அமைச்சர் உதயகுமாரும் வலியுறுத்தினார். அதை நானும் ஆதரிக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி இப்போதைக்கு தொடர்கிறது. தேர்தல் நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். கமல்ஹாசன் அரசியலில் எல்கேஜியில் கூட சேரவில்லை. ஆனால், நடிப்பில் திரையுலக சக்கரவர்த்தி. நகைச்சுவைக்காக அதிமுக குறித்து பேசி வருகிறார் என்றார்.