×

கஞ்சா வியாபாரியை கொன்று வனப்பகுதியில் உடல் புதைப்பு: கைதான வாலிபர் பகீர் வாக்குமூலம்

செய்யூர்: மதுராந்தகம் அடுத்த பழைய மாம்பாக்கத்தில் தனியார் வீட்டுமனை பகுதி உள்ளது. இங்கு, கடந்த 14ம் தேதி ஒரு கத்தி ரத்தம் படிந்த நிலையில் கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், கத்தியை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது, சந்தேகத்தின்பேரில், அதே பகுதியை சேர்ந்த சபரீசன் (30) என்பவரை பிடித்து, கடந்த 3 நாட்களாக துருவி துருவி விசாரித்தனர். சபரீசனின் நண்பர், சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி டோரா கார்த்திக் (32). கடந்த 14ம் தேதி மேற்கண்ட பகுதியில் 2 பேரும் மது அருந்தினர்.

அப்போது, போதை தலைக்கேறியதும், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சபரீசன், மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திக்கை வெட்டி கொலை செய்தார். பின்னர், தனது நண்பர்களின் உதவியோடு கார்த்திக் உடலை, முருகம்பாக்கம் கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் புதைத்துவிட்டார் என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், நேற்று மாலை முருகம்பாக்கம் வனப்பகுதிக்கு சென்று, அங்கு சடலம் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்தனர்.

பின்னர், அப்போது இருள் சூழ்ந்ததாலும், தாசில்தார், வருவாய் துறையினர் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்க வேண்டிய நிலையும் இருந்தது. இதையடுத்து சபரீசனுடன், காவல் நிலையம் திரும்பி சென்றனர். தொடர்ந்து, இன்று தாசில்தார் மற்றும் வருவய் துறையினர் முன்னிலையில், அரசு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, சடலத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரீசனை கைது செய்தனர். தொடர்ந்து, அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : cannabis dealer ,Pakir ,forest , Cannabis dealer, killer, wilderness, body burial
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ