ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அடுத்த கன்னிகாபுரம் ஊராட்சி எம்ஜிஆர் நகர் பகுதியில் சிலர் சுடுகாட்டு பகுதியில் ஆக்ரமிப்பு செய்தனர். இதைக்கண்டித்து அப்பகுதி மக்கள் கடந்த 14ம் தேதி செங்குன்றம் - தாமரைப்பாக்கம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல், ஊத்துக்கோட்டை அருகே தொம்பரம்பேடு கிராமத்தில் தாராட்சி ஊராட்சி சார்பில், விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. இதற்கு தொம்பரம்பேடு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு கிராம மக்களையும் தாசில்தார் அழைத்து சமரச பேச்சி வார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தாராட்சி கிராம மக்கள் தங்கள் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் கடந்த 15ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், ஊரடங்கை மீறி சாலை மறியல் செய்ததாக கன்னிகாபுரம் மக்கள் 32 பேர் மீது வெங்கல் போலீசாரும், தாராட்சி ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி உட்பட கிராம மக்கள் என 90 பேர் மீது ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், மொத்தம் 122 பேர் மீது சாலை மறியல் செய்ததாக வழக்கு பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.