×

இன்னோவா கார் இல்லை...ஏரோப்ளேனே வாங்கி கொடுத்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலரவே முடியாது: நாஞ்சில் சம்பத்!

சென்னை; ஏரோப்ளேனே வாங்கி கொடுத்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலரவே முடியாது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருப்பதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இப்பவே கூட்டணி பேச்சுவார்த்தைகள், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் வாக்குவாதங்கள் தொடங்கி விட்டன. குறிப்பாக தமிழக பாஜக கட்சி மிகவும் சுறுசுறுப்பாக இந்த தேர்தலை சந்திக்க உள்ளது என்பதும் அதற்காக மாற்றுக் கட்சியில் உள்ளவர்களை தங்கள் கட்சிக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இரு நாட்களுக்கு முன் பாஜகவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அதில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியே வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று கூறினார். மேலும், பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் மாவட்டத் தலைவருக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்றும் எல்.முருகன் அறிவித்தார். இவரின் இந்த கருத்து சமூகவலைதளங்களில் பேசும்பொருளானது. பலரும் சமூக வலைதளங்களில் நாஞ்சில் சம்பத்தையும் இன்னோவா காரையும் குறிப்பிட்டு விமர்சிக்க தொடங்கினர். ஏனெனில் நாஞ்சில் சம்பத் ஜெயலலிதாவிடம் இன்னோவா கார் பரிசாக பெற்றிருந்தார்.

இந்நிலையில் விமர்சனங்களுக்கு நாஞ்சில் சம்பத் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பாஜக தமிழகத்தில் தரங்கெட்ட அரசியலை முன்னெடுக்க போவதாக குற்றம்சாட்டினார். எந்த விலைய கொடுத்தாவது வெற்றி பெற பாஜக நினைக்கிறது என்றும் கூறினார். மேலும் பேசிய அவர், வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் மாவட்ட செயலாளர்களுக்கே கார் பரிசு என்றால் , இன்னும் எந்த பாவத்தை எல்லாம் செய்வார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். பாஜகவினருக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன், இன்னோவா கார் இல்லை. ஏரோப்ளேனே வாங்கி கொடுத்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலரவே முடியாது. அவர்கள் பிழைக்கவும் முடியாது என்று நாஞ்சில் சம்பத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,Nanjil Sampath , Innova car, airplane, Tamil Nadu, Tamarai, BJP, Nanjil Sampath
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...