தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சிவகளை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளை மரபணு ஆய்வு செய்வதற்காக சேகரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் சிவகளை அகழாய்வில் பண்டைய தமிழர் நாகரிகம், பண்பாட்டு சுவடுகளை எடுத்துரைக்கும் பொருட்கள் அதிகளவில் கிடைத்து வருகின்றன. அதாவது இதுவரை அங்கு 23 குழிகள் தோண்டப்பட்ட நிலையில், சுமார் 31 முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. மேலும் அவற்றில் மனித எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து மரபணு ஆய்விற்காக மனித எலும்புகளை சேகரிக்கும் பணியானது தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் பிச்சையப்பன் தலைமையில் தற்போது மரபணு ஆய்விற்கான பணிகளை தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து இங்கு சேகரிக்கப்படும் எலும்புகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆய்வகத்தில் பாதுகாக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போதுள்ள கொரோனா பரவல் காரணமாக மனித எலும்புகளை அனுப்பிவைப்பதில் சிக்கல் நிலவுவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, கொரோனா முடிவுக்கு பிறகு, மரபணு ஆய்விற்காக மனித எலும்புகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.