திருவனந்தபுரம்: ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆவணி மாத பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்ட போதும் சிறப்பு பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.
இதனையடுத்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேகம், உஷப்பூஜை, உச்ச பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூஜைகளுக்கு பின் மீண்டும் அடைக்கப்பட இருக்கும் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு தீபாராதனை நடைபெறவுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகின்ற 21ம் தேதி வரை ஆவணி மாத பூஜைகள் நடைபெறவிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் வழிபட பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த ஓராண்டாக சபரிமலையில் தந்திரியாக இருந்த கண்டரரு மகேஷ் மோகனரின் ஒரு ஆண்டு பதவிகாலம் நிறைவுபெற்றது.
இந்த ஆண்டுக்கு புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவரு பொறுப்பேற்றார். அவர் நேற்று சபரிமலையில் தனது பணிகளை தொடங்கினார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டு உள்ளது. இதனால், நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.