சின்னாளபட்டி: கொரோனா ஊரடங்கால் 4 மாதங்களாக கடையை திறக்க முடியாமல் பசி, பட்டினியால் தவித்த முடி திருத்தும் தொழிலாளி, தனது மனைவியுடன் நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னாளபட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பிஆர் மடத்துத் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (65). இவரது மனைவி காளியம்மாள் (60). தர்மராஜ் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். கொரோனா ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக கடையை திறக்க முடியவில்லை. இதனால் தர்மராஜ் வேலையின்றி தவித்துள்ளார். அருகில் உள்ளவர்கள் கொடுக்கும் உணவுப்பொருட்களை கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.
அருகில் உள்ள வீட்டில் நேற்று டீ தூள் வாங்கிச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவர்களுக்கு உணவுப்பொருட்கள் கொடுக்கலாம் என பக்கத்து வீட்டுக்காரர் மொட்டைமாடியில் உள்ள தர்மராஜ் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தர்மராஜ், காளியம்மாள் இருவரும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து சின்னாளபட்டி போலீசார் விசாரணை நடத்தினர். கொரோனா ஊரடங்கால் நான்கு மாதங்களாக பசி, பட்டினியுடன் வாழ்ந்த வயதான தம்பதிகள், தற்கொலை செய்த சம்பவம் சின்னாளபட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.