திருமலை: ஆந்திராவில் மனித தலையை அடுப்பில் சுட்டு தின்ற சைக்கோ வாலிபர், இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், ரெல்லி வீதி எப்போதும் பொதுமக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். ஆனால், கொரோனா காரணமாக தற்போது மக்கள் நடமாட்டம் சற்று குறைவாகவே உள்ளது. இந்நிலையில், நேற்று அப்பகுதியில் இருந்த ஒரு கோணிப் பையை ராஜூ என்பவர் திறந்து பார்த்துள்ளார். அதில், மனித தலை இருப்பதை கண்டதும், உடனே அதை அருகில் உள்ள பாழடைந்த வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இதை அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியம் பார்த்தார். பின்னர், ராஜூவை ரகசியமாக பின்தொடர்ந்து சென்றார். பாழடைந்த வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது, மனித தலையை அடுப்பில் வைத்து ராஜூ சுட்டு தின்று கொண்டிருந்தார். மேலும், அவருடன் இளம்பெண் ஒருவர் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து போலீசாருக்கு சுப்ரமணியம் தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு விரைந்து வந்து, ராஜூவையும் இளம்பெண்ணையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அந்த பெண் யார்? எதற்காக அங்கு தங்கியிருந்தார்? மனித தலை மயானத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதா? அல்லது வேறு யாரையாவது கொலை செய்து கொண்டு வந்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ராஜூவின் தந்தை 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். பின்னர், அவர் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டார். இவரது நடவடிக்கை பிடிக்காத அவரது தாய் எலமாச்சி, அவரை விட்டு வேறு இடத்திற்கு சென்று பழக்கடை நடத்தி வருகிறார். ராஜூவுக்கு மனநிலை பாதித்துள்ளது. சைக்கோ போன்று சில நேரங்களில் இடுகாட்டிற்கு சென்று வருகிறார்,’’ என்றனர்.