×

ரூ.5-க்கு மருத்துவச் சேவை செய்த டாக்டர் திருவேங்கடம் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!!

சென்னை: சென்னை வியாசர்பாடியில் மருத்துவர் திருவேங்கடம் என்பவர் 5 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். ஆரம்ப காலத்தில் அவர் 2 ரூபாய்க்கு மட்டுமே மருத்துவம் பார்த்து சேவையாற்றி வந்தார். இந்நிலையில், 70 வயதான திருவேங்கடம், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 13-ம் தேதி தெற்கு ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே, மாரடைப்பு ஏற்பட்டு, டாக்டர் திருவேங்கடம் நேற்று (ஆகஸ்ட் 15-ம் தேதி)  நள்ளிரவில் காலமானார். இது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

5 ரூபாயில் ஏழை, எளியோருக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில், 5 ரூபாய் டாக்டர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட திருவேங்கடம் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த மருத்துவச் சேவை வழங்கியுள்ளார் திருவேங்கடம். மருத்துவர் திருவேங்கடத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், வியாசர்பாடி, எருக்கஞ்சேரி பகுதி மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல், அனுதாபம் தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,  வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி தன் வாழ்நாளில் அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே சிகிச்சை கட்டணமாகப் பெற்றவர் ‘மக்கள் டாக்டர்’ திருவேங்கடம்! எளிய மக்களின் உயிர் காக்கும் அன்பிற்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.


Tags : Thiruvenkadam ,death ,MK Stalin ,Edappadi Palanisamy ,DMK ,Chief Minister , Chief Minister, Palanisamy, MK Stalin's condolences for the death of Dr. Thiruvenkadam who did medical service for Rs. 5 .. !!!
× RELATED லாடபுரத்தில் 9 கோழிகள் திருட்டு ஆட்டை அறுத்து திருட்டு