×

கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள மலைக் குன்றுகள் உடைக்கப்பட்டு பல ஆயிரம் டன் எம்.சாண்டாக கர்நாடகாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி: கர்நாடகாவில் நடைபெறும் கட்டிட பணிகளுக்காக தமிழகத்தின் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள மலைக் குன்றுகள் ஒவ்வொன்றாக உடைக்கப்பட்டு தினமும் பல ஆயிரம் டன் எம்.சாண்டாக கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் மலைகள் நிறைந்த பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 150 மலைக் குன்றுகள் உள்ளன. இவற்றில் 80 மலைக் குன்றுகள், கர்நாடக - தமிழக எல்லையான ஓசூரில் அமைந்துள்ளன.

தமிழகத்தில் இந்த மாவட்ட நிர்வாகம் மட்டுமே கனிமவளங்களை பாதுகாப்பதை விடுத்து, அதிக அளவில் மலைகளை உடைப்பதற்காக 112 கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளதாகவும், இதில் மோரண பள்ளி, சானமாவு, தொரப்பள்ளி அக்ரஹாரம், சீகாணபள்ளி, அழூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வனப்பகுதிகளில் உள்ள பல மலைகள் கல்குவாரிக் கொள்ளையர்களால் மாயமாகிவிட்டதாக புகார் முன்வைக்கப்படுகின்றது.

எம்.சாண்ட் பயன்பாட்டுக்கு என மலைகளை உடைக்க அனுமதி பெற்றவர்களில் பெரும்பாலானோர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. உள்ளூர் பயன்பாட்டுக்கு, அதுவும் நாளொன்றுக்கு 500 லாரிகளுக்கு மட்டும் எம்.சாண்ட் ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தினமும் மலைக் குன்றுகளை உடைத்து கற்களை ஜல்லிகளாகவும்,ஜல்லிகளை எம்.சாண்டாகவும் மாற்றி தினமும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய டாரஸ் லாரிகளில், ஓசூர் - அத்திப்பள்ளி வழியாக கர்நாடக மாநிலத்துக்கு பகிரங்கமாக கடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக தேவை தவிர வெளிமாநிலங்களுக்கு எம்.சாண்ட் ஏற்றிச்செல்லக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி, மலைகளை அழிப்பதை கனிமவளத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இங்குள்ள ஒப்பந்ததாரர்கள் போட்டிபோட்டு செய்து வருவதாக குற்றஞ்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத எம்.சாண்ட் கடத்தலை தடுத்து நிறுத்துவதோடு, இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.



Tags : hills ,Krishnagiri ,area ,Karnataka ,M.Sanda ,M.Sant , Krishnagiri, Karnataka, M.Sant
× RELATED கொடைக்கானல் மலைப்பகுதியில் கோடை...