×

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: முதல்முறையாக செமியில் லெய்ப்ஜிக்

லிஸ்பன்: யுஈஎப்ஏ  ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிகள் போர்ச்சுக்கலில்  இப்போது நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த 2வது காலிறுதிப் போட்டியில் ஜெர்மனியின்  ஆர்பி லெய்ப்ஜிக் - ஸ்பெயினின் அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின. முதல்பாதியில் 2 அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. அதனால் 2வது பாதி ஆட்டத்தில் அனல் பறந்தது. அதற்கு பலனாக லெய்ப்ஜிக் அணியின் முன்கள ஆட்டக்கார்  டானி ஓல்மோ ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் அடித்த கோல் அணியை முன்னிலைப் படுத்தியது. பதில் கோலடிக்க ஏடிஎம் வீரர்களும் வேகம் காட்டினர்.

71வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி  வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட ஜோவா பெலிக்ஸ் அற்புதமாக கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு வந்தது. ஆட்டம் முடிய 2 நிமிடம் மட்டுமே இருந்தபோது லெய்ப்ஜிக் நடுகள ஆட்டக்காரர்  டைலர் ஆடம்ஸ்  பெனால்டி பகுதியில் இருந்து அடிந்த பந்து அழகாக கோலானது. அதன்பிறகு எந்த மாற்றமும் நிகழாததால் ஆட்டத்தின் முடிவில் லெய்ப்ஜிக் அணி 2-1 என்ற கோல் கணக்கில்  ஏடிஎம் அணியை வீழ்த்தி, சாம்பியன்ஸ் லீக் தொடரில் முதன்முறையாக  அரையிறுதிக்கு முன்னேறியது. முதல் காலிறுதியில் வென்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணியுடன் ஆக.20ம் தேதி அதிகாலை நடைபெறும் முதல் அரையிறுதியில்  ஆர்பி லெய்ப்ஜிக் அணி மோத உள்ளது.



Tags : Leipzig ,European Champions League ,semi-finals , European Champions League, Leipzig in the semis
× RELATED ரஞ்சி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு