சென்னை: பாஜக நிர்வாகியான, நடிகர் எஸ்.வி சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக அரசையும், அதிமுக கொடியை அவமதித்தும் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்திருந்தனர். மேலும் வழக்கு போட்டால் ஓடி ஒளிந்து கொள்வார் என்று முதல்வர் விமர்சித்திருந்தார். மேலும் தேசிய கொடியை அவமதித்ததும், முதல்வர் பற்றி அவதூறாகப் பேசியதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை, அரசு அதை நிறைவேற்றும்” என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இந்த நிலையில், மீண்டும் அரசு மற்றும் முதல்வர் குறித்து எஸ்.வி சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் காவி நிறம் களங்கம் என்றால் தேசியக் கொடியில் ஏன் காவி நிறம் என்கிற வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாக நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கமாக இதுபோன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், உடனடியாக குற்றம்சாட்டப்படுகிறவர்கள் கைது செய்யப்படுவது வழக்கம். இந்த வழக்கில், எஸ்.வி.சேகர் கைது செய்யப்பட்டுவாரா? அல்லது வழக்கு மட்டும் பதிவு செய்யப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.