×

கீழடி அருகே கொந்தகையில் 5 அடி உயர எலும்புக்கூடு கண்டெடுப்பு: சிதையாமல் முழுமையாக கிடைத்தது

திருப்புவனம்: கீழடி அருகே கொந்தகையில் நடந்து வரும் அகழாய்வில் 5 அடி உயர எலும்புக்கூடு கண்ெடடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி மட்டுமின்றி கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடந்து வருகிறது.
பண்டைய காலத்தில் மயானமாக இருந்த கொந்தகையில் முதன்முறையாக தமிழக தொல்லியல் துறையும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபணு பிரிவும் இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றன. இந்த ஆய்விற்கு தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமை வகிக்கிறார். இதுவரை 7 குழிகள் தோண்டப்பட்டன. 14 முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. 4 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளின் எலும்புக்கூடுகளை ஆய்விற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபணு பிரிவினர் எடுத்து சென்றுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எலும்புகளின் மரபணு ஆய்வு பணி இன்னும் தொடங்கவில்லை.
இந்நிலையில் கொந்தகையில் நேற்று நடந்த அகழாய்வில் 5 அடி உயர முழுமையான எலும்புக்கூடு கிடைத்தது. முகத்தின் தாடை எலும்பு, பல், கால் மூட்டு ஆகியவற்றில் உள்ள செல்களை சோதனை செய்வதன் மூலம் எலும்புக்கூட்டின் காலத்தை துல்லியமாக கண்டறிய வாய்ப்புள்ளது என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘பண்டை காலத்தில் இறந்தவர்களை மூன்று முறைகளில் புதைத்துள்ளனர். பராமரிக்க முடியாதவர்களை உயிருடன் பானைகளில் இறக்கி உணவு, தண்ணீர் வைத்து புதைப்பது, வேறு இடத்தில் புதைத்தவர்களின் எலும்புகளை தோண்டி எடுத்து வந்து பானையில் வைத்து மற்றொரு இடத்தில் புதைப்பது, இறந்தவர்களை அப்படியே தற்போதைய நடைமுறை போன்று புதைப்பது என்ற முறைகளை கடைப்பிடித்துள்ளனர். தற்போது கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு அப்படியே புதைக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.



Tags : gorge , Bottom, condyle, skeleton
× RELATED குன்னூரில் 1000 அடி பள்ளத்தில் குதித்து...