×

கும்பகோணம் அருகே ரூ.40,000 பணத்திற்காக சிறுவனை அடமானம் வைத்த அவலம்...!! கொத்தடிமையாக இருந்த சிறுவனை அதிகாரிகள் மீட்பு!!!

கும்பகோணம்:  ஆடு மேய்ப்பதற்காக 40 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு அடமானம் வைக்கப்பட்ட 10 வயது சிறுவனை வருவாய் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். தங்கம், வெள்ளி நகைகளை அடமானம் வைப்பதுபோன்று 10 வயது சிறுவனை 40 ஆயிரம் ரூபாய்க்காக ஆடு மேய்க்க அடமானம் வைத்தது கும்பகோண வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கரந்தக்குடி குழந்தைராமபட்டி கிராமத்தில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10 வயதில் ஒரு ஆண்பிள்ளை உள்ளது. இந்நிலையில் இவர் முருகானந்தம் என்பவரிடம் 40 ஆயிரம் பணத்தை பெற்று கொண்டு தனது மகனை அடமானம் வைத்துள்ளார்.

இதனையடுத்து முருகானந்தம் 10 வயது சிறுவனை தனது பண்ணையில் உள்ள ஆடுகளை மேய்க்க பயன்படுத்தியுள்ளார். இதனையடுத்து சிறுவன் கடந்த 3 வருடங்களாக அங்கு கொத்தடிமையாக இருந்துள்ளான். இதன்பின்னர், சிறுவனை கொத்தடிமையாக வைத்திருப்பதாக குழந்தைகள் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பாபநாசம் அருகே ராஜகிரியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனை வருவாய் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 10 வயது சிறுவனை ஆடு மேய்ப்பதற்காக கொத்தடிமையாக பயன்படுத்திய முருகானந்தத்தின் மீது கொத்தடிமைகள் மீட்பு சட்டத்தின் கீழ் வருவாய் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வெறும் 40 ஆயிரம் ரூபாய்க்காக சிறுவன் அடமானம் வைக்கப்பட்டுள்ளது கும்பகோணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kumbakonam , It is a pity that a boy was mortgaged for Rs. 40,000 near Kumbakonam ... !! Authorities rescue a boy who was in bondage !!!
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...