சென்னை: சென்னையில் கடந்த ஜூன் மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கொரோனா சிறப்பு மையம் அமைக்க மாநகராட்சி உத்தரவிட்டது. இதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் 1300 படுக்கை கொண்ட கோவிட் கேர் மையம் செயல்பட்டுவந்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. தற்போது கொரோனா நோய்க்கு 11 ஆயிரத்து 130 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்படி சென்னையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் பல கோவிட் கேர் மையங்கள் காலியாக வருகிறது. இதன்படி அண்ணா பல்கலைக்கழக கோவிட் கேர் மையத்தில் 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். இதனால் அவர்கள் அனைவரையும் கிண்டி கிங் மருத்துவமனைக்கு மாற்றிவிட்டு அண்ணா பல்கலை மையத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மூடியுள்ளனர்.