சென்னை: கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதை அடுத்து, முதல்,இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால், இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடக்கும் என்றும் தெரிவித்தது. இந்நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்ட படிப்புகளுக்கு எப்படி மதிப்பெண் கணக்கிட வேண்டும் என்று உயர்கல்வித்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை அறிவித்துள்ளன. தேர்வு செய்யப்பட்ட படிப்புகளில் படித்து வரும் மாணவர்கள் எழுதிய முந்தைய எழுத்து தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் 30 சதவீதமும், அகமதிப்பீடுகளில் பெற்ற மதிப்பெண்களில் 70 சதவீதமும் எடுத்து தேர்ச்சி மதிப்பெண்கள் கணக்கிட வேண்டும். செய்முறைத் தேர்வுகள் உள்ள பாடங்களில் அந்தந்த பாடங்களுக்குரிய பதிவேடுகளுக்கான மதிப்பெண்களை எடுக்க வேண்டும். கடந்த செமஸ்டரில் எழுதாத மாணவர்களுக்கு அக மதிப்பீட்டு மதிப்பெண்கள் கணக்கிட மீண்டும் தேர்வு நடத்தப்படும். செய்முறைத் தேர்வில் கடந்த முறை பெற்ற மதிப்பெண்களே வழங்கப்படும்.