இளைஞர்களிடம் கொரோனா எந்த மாதிரியான தாக்கத்தை உண்டாக்கியுள்ளது என்பதை அறிவதற்காக, ஐ.எல்.ஓ என்கிற சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. இணையதளம் வாயிலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 112 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்றனர். கல்வி கற்பதிலும், வேலை பார்ப்பதிலும் ஓர் அசாதாரண சூழல் உருவாகி இருப்பதால் 50 சதவிகித இளைஞர்கள் கடும் மன அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது இதில் தெரிய வந்துள்ளது. மூன்றில் ஒருவர் நிச்சயமற்ற எதிர்காலத்தை நினைத்தும், வேலை குறித்தும் மனப்பதற்றத்தில் இருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் 18 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட இளம்பெண்களின் மன அழுத்தம் இந்த ஊரடங்கு காலத்தில் பல மடங்காக அதிகரித்துள்ளது. ஏற்கனவே, வேலை வாய்ப்பு, வருமானம், சமூக வாழ்க்கை குறித்த பிரச்னையில் இருந்தவர்களுக்கு இது கூடுதல் சவாலாகி இருக்கிறது.
இவர்களில் 73 சதவிகித இளைஞர்கள் திடீரென்று தொலைதூரக் கல்வி, வீட்டிலிருந்தே வேலை என்ற ஆன்லைன் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் தத்தளிப்பதாகவும் கூறியுள்ளனர். பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நாடுகளில் வேலை நேரம் அதிகமாகவும், வருவாய் குறைவாகவும் மாறியுள்ளதும் கவலைக்குரியதாக இருக்கிறது. இதுபற்றி ஐ.எல்.ஓ ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் ஜெனரல் கய் ரைடர் கூறும்போது, ‘‘கொரோனாவானது வாழ்க்கையின் எல்லா தளத்திலும் கடுமையான சேதங்களை உண்டாக்கியுள்ளது. இளைஞர்களின் கல்வி, வேலை, வருமானத்தில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மனநலத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பாதிப்பு உடனடியாக நீங்காது. நீண்ட நாட்களுக்கு இந்த சிக்கலை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது கவலைக்குரியது. எனவே, இளைஞர்களின் மனநலனை நாம் எல்லோரும் தற்போது கருத்தில் கொள்ள வேண்டும்,’’ என்றார்.
பரிதவிக்கும் இளம்பெண்கள்
* இந்த ஆய்வு 112 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரம் இளைஞர்களிடம் நடத்தப்பட்டது.
* கல்வி, வேலை வாய்ப்பில் அசாதாரண சூழல் உருவாகி இருப்பதால் 50 சதவிகித இளைஞர்கள் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளனர்.
* உலகில் மூன்றில் ஒருவர் நிச்சயமற்ற எதிர்காலத்தை நினைத்தும், வேலை குறித்தும் மனப்பதற்றத்தில் இருக்கின்றனர்.
* 18 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட இளம்பெண்களின் மன அழுத்தம் இந்த ஊரடங்கு காலத்தில் பல மடங்காக அதிகரித்துள்ளது.
* இவர்களில் 73 சதவிகித இளைஞர்கள் திடீரென்று தொலைதூரக் கல்வி, வீட்டிலிருந்தே வேலை என்ற ஆன்லைன் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் தத்தளிக்கின்றனர்.