வேளச்சேரி: புறநகரில் வாடகைக்கு வீடுஎடுத்து தங்கி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர். புறநகர் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், கூலி தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், பள்ளிக்கரணை அடுத்த ஒட்டியம்பாக்கம், அரசன் கழனி பகுதியில் வெளியூரை சேர்ந்த சிலர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளதாகவும், அவர்கள் நடவடிக்கையில் சந்தேகம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் அந்த வீட்டை நேற்று சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது 13 கிலோ கஞ்சா சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, அந்த வீட்டில் இருந்த 7 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் நுங்கம்பாக்கம் திருவிக காலனி பஜனை கோயில் தெருவை சேர்ந்த அன்புசெல்வம் (31), ஒட்டியம்பாக்கம், வில்வ கணபதி தெருவை சேர்ந்த பிரவீன் ராஜ் (34), புனித தோமையார் மலை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த அருண் பாண்டியன் (23), மேடவாக்கம், கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த மணி (36), கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்தூர், கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (38), மதுரை, கரிமேடு, அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்த வேல்முருகன் (27), மதுரை, புதுநகர், தத்தனேரி சேர்ந்த பாலகுரு (28) என்பது தெரியவந்தது. இவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, புறநகரில் கஞ்சா விற்று வந்தது தெரிந்தது. அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
* 7 வாலிபர்கள் பிடிபட்டனர்
பொழிச்சலூர் அடையாறு ஆற்றுப்பாலம் அருகே கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த லஷ்மணன் (24), பல்லாவரத்தை சேர்ந்த வினோத் (23), மொய்னுதீன் (22), சேக்உமர் (22) ஆகியோரை போலீசார் கைது செய்து, 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல், வடசென்னையில் கஞ்சா விற்ற சதீஷ்குமார், கல்லூரி மாணவர்களான எட்வின் ராபர்ட் மற்றும் அஜித்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து, 3 கிலோ கஞ்சா, 4 செல்போன், கத்தி, 2 பைக் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.