×

பிஎஸ்என்எல் ஊழியர்கள் எல்லாரும் தேசதுரோகிகள்: பாஜ எம்பி ஹெக்டே மீண்டும் சர்ச்சை

பெங்களூரு: ‘‘பிஎஸ்என்எல். தொழிலாளர்களை தேசத் துரோகிகள்,’’ என்று பாஜ எம்பி அனந்தகுமார் ஹெக்டே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த பாஜ. எம்பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த்குமார் ஹெக்டே சர்ச்சைக்கு பெயர் போனவர். தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்குவது இவருடைய வழக்கம். இந்நிலையில், அவர் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மத்திய அரசால் காப்பாற்ற முடியவில்லை. இதனால் ஏற்கனவே 85 ஆயிரம் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம். வரும் நாட்களில் மீதமுள்ள தொழிலாளர்களையும் வீட்டுக்கு அனுப்பி வைப்போம்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் அனைவரும் தேச துரோகிகள். அவர்கள், இந்த நிறுவனத்தில் நிரம்பியுள்ளனர் இதனால், இதை விரைவில் மூடப்படும். அதேபோல், அனைத்து வசதிகள் இருந்தாலும்  தொழிலாளர்கள் யாரும் சரியாக வேலை செய்வதில்லை. இதனால் இந்த நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். அவர் பேசிய பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர்  இவர் பேசிய அரசியல் சாசனம் தொடர்பாக உட்பட சில பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags : Hegde ,BSNL ,BJP , BSNL employees, everyone, traitors, BJP MP Hegde, controversy again
× RELATED காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு சார்பில்...