×

தாமரைக்குப்பம் பகுதியில் மழையால் சரிந்து விழுந்த பாலம்: சீரமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: தாமரைக்குப்பம் பகுதியில் மழையால் சேதமடைந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே செஞ்சியகரம் கிராமத்தில் உள்ள வில்லியர் காலனியில் 100க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், விவசாய கூலி வேலைக்கும், ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கும் அருகில் உள்ள வனப்பகுதிக்கு செல்வார்கள். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தாமரைக்குப்பத்திலிருந்து கண்ணன்கோட்டை புதிய நீர்த்தேக்கம் வரை செல்ல புதிதாக கால்வாய் கட்டப்பட்டது.

இதனால், செஞ்சியகரம் வில்லியர் காலனி மக்கள் விவசாய  வேலைக்கும், ஆடு, மாடுகள் மேய்க்கவும் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதனால், கால்வாயின் குறுக்கே சிறுபாலம் கட்டப்பட்டது. இதனையடுத்து, அந்த பாலத்தை வில்லியர் காலனி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் அந்த பாலத்தின் நுழைவு வாயில் சேதமடைந்து விட்டது. இதனால், இரவு நேரத்தில் பாலத்தை கடக்க அப்பகுதி மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : area ,Tamaraikuppam ,Tamaraikkuppam , Lotus area, rain, collapsed, bridge, request for alignment
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...