×

குமரியில் தொடர் கடல் சீற்றம் குளச்சல் துறைமுக பழைய பாலம் மீண்டும் உடைந்தது: மணக்குடி அருகே சாலை துண்டிப்பு

குளச்சல்: குளச்சலில் ஏற்பட்ட தொடர் கடல் சீற்றத்தினால் துறைமுக பழைய பாலம் மீண்டும் உடைந்து கடலில் விழுந்தது. மணக்குடி அருகே ஒரு கிலோ மீட்டர் சாலை துண்டிக்கப்பட்டது. குமரிமாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் நீர் ஊருக்குள் புகுவதால் மீனவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்றும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. குளச்சல் வர்த்தக துறைமுக திட்டத்திற்கு கடந்த 1989ம் ஆண்டு அப்போதைய திமுக  ஆட்சியின்போது குளச்சல் துறைமுகத்தில் பாலம் கட்டும் பணி தொடங்கியது.  தொடர்ந்து 5 ஆண்டுகளாக 170 மீட்டர் தூரம் வரை பாலம் கட்டி முடிக்கப்பட்டது.  பின்னர் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

மாலைவேளை பொழுதுபோக்கிற்கு  குளச்சல் கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் இந்த பாலத்தில் அமர்ந்து  உடலை வருடிச்செல்லும் காற்று மற்றும் சூரியன் மறையும் காட்சியையும்  ரசித்து செல்வர். இந்த பாலத்தை கப்பலில் மணல் ஏற்றுவதற்காக மணவாளக்குறிச்சி  ஐஆர்இ மணல் ஆலை பயன்படுத்தி வந்தது. ஆனால் 1995க்கு பிறகு கப்பல்கள் இங்கு  வருவதை நிறுத்தி கொண்டதால் இந்த பாலம் பயனற்று போனது.
கடந்த 2016ல்  குளச்சல் மீன்பிடி துறைமுகம் செயல்படுவதற்கு முன்புவரை டெம்போவில் தண்ணீர்  கொண்டு வரப்பட்டு, இந்த பாலம் வழியாகத்தான் விசைப்படகுகளுக்கு  ஏற்றப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக இந்த பாலத்தில் காங்கிரீட் பெயர்ந்து  உப்புக்காற்றில் கம்பிகள் துருப்பிடித்து மிகவும் ஆபத்தான நிலையில்  காணப்பட்டது.
இந்த நிலையில் குளச்சலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு  ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பை தாண்டி  விழுந்தது. ேமலும் அலைகளால் துறைமுக பாலத்தின் காங்கிரீட் பெயர்ந்து கடலில்  விழுந்தது. காங்கிரீட் பெயர்ந்த பகுதியில் 3 தூண்கள் தனியாக பிரிந்து  காணப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கடல் மீண்டும்  சீற்றமாக காணப்பட்டு வருகிறது. இதில் எழுந்த அலைகளினால் பாலத்தின்  காங்கிரீட் 10 மீட்டர் தூரத்திற்கு பெயர்ந்து கடலில் விழுந்தது.  அப்பகுதியில் 5 தூண்கள் மட்டும் தனியாக நிற்கின்றன.

நாகர்கோவில் அடுத்த சொத்தவிளை பகுதியில்  கடல் சீற்றம் காரணமாக சாலைகள் முழுமையாக அரிக்கப்பட்டுள்ளன. இதே போல்  உசரவிளை முதல் மணக்குடி வரை சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு சாலை கடல்  அரிப்பால் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. அடிக்கடி இந்த பகுதியில் சாலை  அரிப்பு ஏற்படுகிறது. சொத்தவிளை மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற வேண்டிய  பகுதி ஆகும். கடல் அரிப்பால், மிகவும் ஆபத்தான பகுதியாக மாறி வருகிறது  என்று அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.

Tags : bridge ,Manakkudi ,Kumari Kulachal , Kumari, Sea Fury, Kulachal Port, Old Bridge, Manakkudi
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...