கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரை சந்தலில் கொரோனா ஊரடங்கால் முடங்கியுள்ள மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கள்ளக்குறிச்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் தனியார் பள்ளி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து கிராமப்புற மாணவர்களுக்கு போதிய இணைய வசதி போன்றவை இல்லாத காரணத்தினால் அவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் குதிரை சந்தலை சேர்ந்த தமிழ் ஆசிரியை மணிமேகலை என்பவர் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று சமூக இடைவெளியுடன் பாடம் நடத்தி வருகிறார். ஆசிரியை வீடுகளுக்கே வந்து பாடம் கற்பிப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கிராமப்புற மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தும் ஆசிரியையின் இத்தகைய முயற்சி பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.