×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான எஸ்ஐ பால்துரை கொரோனாவுக்கு பலி: 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் உடல் தகனம்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்ஐ பால்துரை, மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக கொலை வழக்கு பதிந்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ பால்துரை உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், எஸ்ஐ பால்துரைக்கு நடந்த பரிசோதனையில் கடந்த மாதம் 24ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. அவர் மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரு தினங்களுக்கு முன், பால்துரையின் மனைவி மங்கையர்திலகம், மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், ‘‘எனது கணவருக்கு சர்க்கரை, ஆஸ்துமா உள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதால், சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் பால்துரைக்கு திடீரென மூச்சுத்திணறல் அதிகரித்தது. செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு 12.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவர் இறந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் நேற்று காலை 5 மணியளவில் அறிவித்தது. இத்தகவல், மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கியுள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. மனைவி மங்கையர்திலகம், மகன் பிரவான் (30) ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு வந்து கதறியழுதனர்.

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் கைதானவர் என்பதால், எஸ்ஐ பால்துரையின் இறப்பு குறித்து, மருத்துவமனை நிர்வாகிகளிடம் மாஜிஸ்திரேட் பத்மநாபன் விசாரணை நடத்தினார். அதன் பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மனைவி மங்கையர்திலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சுகாதாரத் துறையினர் வழிகாட்டுதல்படி, மதுரை தத்தனேரி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மதுரை நகர் போலீஸ் துணைக்கமிஷனர் சிவபிரசாத், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, மாலை 5 மணி அளவில் 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் பால்துரை உடல் தகனம் செய்யப்பட்டது.

* ‘உரிய சிகிச்சை இல்லை’
பால்துரையின் மனைவி மங்கையர்திலகம் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘இந்த கொலை வழக்கிற்கும், எனது கணவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த வழக்கில் அவரை 10வது குற்றவாளியாக கைது செய்துள்ளனர். தட்டாரமடம் காவல்  நிலையத்தில் பணியில் இருந்த எனது கணவரை, ஒரு வாரம் மட்டுமே சாத்தான்குளத்திற்கு மாற்றுப்பணியாக அனுப்பினர். இந்த வழக்கில் எனது கணவரை தொடர்புபடுத்த, தட்டாரமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹாரிஸ், சாத்தான்குளம் போலீஸ் நிலைய பெண் எழுத்தர் பியூலா, காவலர் சேவியர் ஆகியோர்தான் காரணம். எனது கணவரிடம் ஒருமுறை கூட சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தவில்லை. ஏற்கனவே அவருக்கு சர்க்கரை நோய் மற்றும் ஆஸ்துமா பாதிப்பு உள்ளது. இத்துடன் கொரோனா தொற்றும் பாதித்ததால் இறந்துள்ளார். அரசு மருத்துவமனையில் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார்’’’’ என்றார்.

Tags : Sathankulam ,SI Balthurai Corona , Sathankulam father, son murdered, arrested SI Balthurai, corona killed, 21 bombs fired, police courtesy, cremation
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...