சென்னை: தமிழநாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக முதல்வரின் உத்தரவுப்படி போர்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், போக்குவரத்துத்துறை அமைச்சர், அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்கிடுமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில், தமிழக அரசின் பல்வேறு துறைகள், தலைமைச் செயலகம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அலுவலகங்களில் உள்ளவர்கள் பணிக்கு வர ஏதுவாக, தேவைக்கேற்ப பேருந்துகள் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறன.
தற்பொழுது, 30.07.2020 அன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தற்பொழுது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களை குழுவாக அழைத்து வருவதற்கும் மற்றும் திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், கூடுதல் பேருந்துகள் தேவைப்படுவோர் tnexpress16@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மற்றும் 9445014402, 9445014416, 9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைப்பேசி எண்கள் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.