×

ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு சபாநாயகர் பதிலளிக்க மேலும் 4 வாரம் அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதிலளிக்க மேலும் நான்கு வாரம் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017ம் ஆண்டு பதவி ஏற்றதும் பிப்ரவரி 18ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் மீது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்கள் அவரது அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதற்கு எதிராக கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,”அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து மூன்று மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும், இதுவரை சபாநாயகர் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் உள்ளார். அதனால் நீதிமன்றமே இந்த விவகாரத்தில் தலையிட்டு தகுதி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து 4 வாரத்தில் பதிலளிக்குமாறு சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பி கடந்த மாதம் 8ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் ரெஜிஸ்டார் நீதிமன்ற நீதிபதி அனில் லட்சுமன் பன்சாரே அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தரப்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதையடுத்து கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் மேற்கண்ட வழக்கில் பதிலளிக்க சபாநாயகருக்கு கூடுதலாக 4 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு நான்கு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Supreme Court ,Speaker ,disqualification ,OPS Supreme Court ,OBS , OPS, 11 MLAs, disqualification case, Speaker responds, 4 weeks, Supreme Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...