×

பழவேற்காடு ஏரியை தூர்வாரக்கோரி வழக்கு: கலெக்டர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரக் கோரிய வழக்கில் திருவள்ளூர் கலெக்டர் பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழவேற்காடு பகுதியை சேர்ந்த மீனவரான உஷா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில், இந்தியாவில் உள்ள உவர் நீர் ஏரிகளில், இரண்டாவது மிகப்பெரிய ஏரியாக பழவேற்காடு ஏரி விளங்குகிறது. இதனால் இந்த பகுதி சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. இந்த ஏரியை நம்பி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏரியை முறையாக தூர்வாராத காரணத்தால் குப்பைக் கழிவுகளாலும், தொழிற்சாலை கழிவுகளாலும், பழவேற்காடு ஏரியின் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. இதனால் மீன்வளமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த ஏரியும், கடலும் சந்திக்கும் முகத்துவார பகுதிகளை தூர்வார நிதி ஒதுக்கப்பட்டிருந்து அந்த பணிகளை மத்திய, மாநில அரசுகள் சரிவர மேற்கொள்ளவில்லை. எனவே, ஏரியை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மாநில அரசின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களை தூர் வாரி பராமரிப்பது, ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. எனவே இதுதொடர்பாக மாநில அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தை தூர்வார ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பினும் வெப்பநிலை, காற்றின் வேகம் போன்ற கடலின் மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளால் முகத்துவாரத்தை முறையாக தூர்வார முடியவில்லை. இந்த இயற்கை மாற்றத்தால் மணல்திட்டுகள் மீண்டும், மீண்டும் மூடி விடுகிறது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்,  மீன்வளத்துறை அதிகாரிகள் 2 வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

Tags : Fruitland Lake, Durvarakkori, Case, Collector, iCourt
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...