×

நாகை அருகே விளை நிலங்களில் மீண்டும் குழாய் பதிக்கும் பணி தீவிரம்: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கேள்விக்குறியானது

கொள்ளிடம்: நாகை அருகே மீண்டும் எரிவாயு குழாய் பதிக்கும் பணி துவங்கி இருப்பதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஒன்றியத்தின் கிழக்கு பகுதிகளில் ஓஎன்ஜிசி சார்பில் மாதனம் திட்டம் என்ற பெயரில் 20க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது. இங்கு எடுக்கப்படும் திராவக நிலையிலான எரிவாயுவை வர்த்தக நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல, கொள்ளிடம் பகுதியில் வேட்டங்குடி, எடமணல், திருநகரி ஊராட்சிகளின் வழியாக மேமாத்தூருக்கு 32 கி.மீ. தொலைவுக்கு விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கெயில் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.

இத்திட்டங்களுக்கு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மக்களின் கருத்துக்கேட்பிற்கு பிறகு குழாய் பதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இப்பகுதியில் விவசாய பணிகளை பாதிக்கும் திட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்கப்படாது என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட கெயில் குழாய் புதைக்கும் பணி கொரோனா பேரிடரின் ஊரடங்கு காலத்திலும், புதிய வழித்தடத்தில் சீர்காழி அருகேயுள்ள திருநகரியிலிருந்து உச்சிமேடு, வெள்ளக்குளம், கேவரோடை,

இருவக்கொல்லை கிராமங்களின் வழியாக பழையபாளையம் முதன்மை எரிவாயு சேமிப்பு மையத்திற்கு குழாய் புதைக்கும் பணிகளை அவசர கதியில் கெயில் நிறுவனம் செய்து வருகிறது. இது குறித்து கூழையார் கிராமத்தை சேர்ந்த திமுக ஒன்றியக் கவுன்சிலர் அங்குதன் கூறியது: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பகுதிகளில் மீண்டும் கெயில் நிறுவனம் எண்ணெய் குழாய் புதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வறட்சி, மழை, வெள்ளம், கடன்சுமை போன்ற பிரச்னைகளினால் விவசாயிகள் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் இது போன்ற பேரழிவுத் திட்டங்களினால் காற்று மாசுபடும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, கெயில் குழாய் புதைப்பு பணிகளை உடனடியாக நிறுத்திட வேண்டும் என தெரிவித்தார்.

Tags : lands ,Naga , Naga, arable lands, pipe laying work
× RELATED கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன்...