×

சாலையின் நடுவே பள்ளங்கள்: விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

சிவகங்கை: சிவகங்கை நகரில் சாலைகளின் நடுவே, ஓரங்களில் காணப்படும் பெரிய அளவிலான பள்ளங்களால் தொடர் விபத்துகள் நடந்து வருகின்றன. சிவகங்கை நகரில் அதிகமான மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகளாக மஜீத் ரோடு, போஸ் ரோடு, காந்தி வீதி, நேரு பஜார், திருப்புத்தூர் சாலை, ரயில்வே கிராசிங் சாலை உள்ளிட்ட சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் தான் நகரின் முக்கியமான பகுதிகளை இணைக்கக்கூடிய சாலைகளாகும். முக்கிய சாலையான காந்தி வீதியில் தார்ச்சாலை பெயர்ந்து மண்சாலையாக காட்சியளிக்கிறது. மரக்கடை வீதி, அரண்மனை அருகில் உள்ள தனியார் ஹோட்டல் எதிர்புறம், வாரச்சந்தை ரோட்டில் தெப்பக்குளம் அருகில் சாலை குண்டும், குழியுமாய் காணப்படுகிறது.

இதுபோல் நகர் முழுவதும் பல சாலைகளில் நீர் செல்வதற்காக சாலையின் கீழே போடப்பட்டுள்ள குழாய்கள் (சிறிய பாலம்) உடைந்து பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை சரி செய்யாமல் அப்படியே போட்டுள்ளதால் மேலும், மேலும் குழாய்கள் உடைந்து சிறிய அளவிலான சாலைகளாக மாறியுள்ளன. இந்த பள்ளங்களில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. இதனால் டூவீலர் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர்  அவதியடைந்து வருகின்றனர். மழை காலங்களில் சாலைகளின் நடுவே உள்ள குழிகள் தெரியாத நிலையில் உள்ளதால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. இவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Motorists ,road ,accident , Road, potholes, accident risk
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி