டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் உள்ள 31 மாணவர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் மாதம் 14ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கொரோனா காரணமாக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் உள்ள மாணவர்களில் சுமார் 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தனர். அதில் டெல்லி மற்றும் மராட்டிய மாநிலங்கள் கூறுவதைப்போலவே கொரோனா காரணமாக தேர்வுகளை நடத்துவற்கு தடை விதிக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளன.
இந்த மனுவானது தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது யு.ஜி.சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பல்கலைகழக இறுதியாண்டு தேர்வை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் செப்டம்பர் மாதத்தில் கண்டிப்பாக நாங்கள் இறுதியாண்டு தேர்வினை நடத்தியே தீருவோம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து தேர்வுகள் நடத்தாமல் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்பதுதான் சட்டமாக இருக்கிறது எனவும் யு.ஜி.சி தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கிடையில் டெல்லி மற்றும் மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே இந்த நேரத்தில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தினால், மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களும், பேராசிரியர்களும் பெரிதளவு பாதிக்கபவார்கள் என தெரிவித்துள்ளது. இதனால் இறுதியாண்டு தேர்வினை நடத்த முடியாது என இரு மாநிலங்களும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதற்கு பல்கலைக்கழக மானிய குழு, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகளை ஒத்திவைத்திருப்பது அப்பட்டமான விதி மீறல் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்ற நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 14ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.