×

சுற்றுச்சூழல் அழிவு மற்றும் நாடு கொள்ளை போவதை நிறுத்த EIA-2020 வரைவு திரும்பப் பெறப்பட வேண்டும்: ராகுல் காந்தி

புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு அறிவிக்கையை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 வரைவின் நோக்கம் தெளிவாக உள்ளது - அது நாட்டை கொள்ளையடிப்பதாகும்.  நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் சூட்-பூட் போட்ட நண்பர்களுக்காக பாஜக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இது மற்றொரு பயங்கரமான எடுத்துக்காட்டு. சுற்றுச்சூழல் அழிவு மற்றும் நாடு கொள்ளை போவதை நிறுத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு திரும்ப பெறப்பட வேண்டும், என கூறியுள்ளார்.

மேலும், இதுகுறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி எம்.பி, சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல, மிகவும் ஆபத்தானதும் கூட. இந்த வரைவு அறிக்கை என்பது, நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக பல ஆண்டுகளாக நடந்த போரில் நாம் பெற்ற வெற்றிகள், பல கடினமான போராட்டங்களால் பெற்ற பலன்களை திரும்பப்பெற்று, நாடுமுழுவதும், பரவலான சுற்றுச்சூழல் அழிவையும் கட்டவிழ்த்து விடக்கூடும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளான நிலக்கரிச்சுரங்கம், மற்றும் பிற சுரங்கப்பணிகளுக்கு இனிமேல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தேவைப்படாது.

நெடுஞ்சாலை, ரயில்வே இருப்புப்பாதைகள் அடர்ந்த வனப்பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் சென்றால் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிச்சாய்க்க வழிவகுக்கும், ஆயிரக்கணக்கான அழிவில் இருக்கும் உயிரினங்களின் வாழ்விடங்களை அழிக்கும். சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு அறிக்கைக்கு பின் பயங்கரமான உண்மை ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், ஒரு திட்டத்தால் சுற்றுச்சூழலை அழித்துவிட்ட பின், சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு செய்ய முடியும் என்பது தான். சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு-2020 என்பது பேரழிவானது. சுற்றுச்சூழல் சீரழிவால் நேரடியாகப் பாதிக்கப்படும் மக்களின், சமூகத்தினரின் குரலை மவுனமாக்குகிறது. ஒவ்வொரு இந்தியரும் சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடுக்கு எதிராக குரல் கொடுத்து போராட வேண்டும்.

சுற்றுச்சூழலைக் காக்க நமது இளைஞர்கள் எப்போதும் முன்களத்தில் நின்று போராடக்கூடியவர்கள். நமக்காக கையில் எடுத்து போராட வேண்டும். அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியான நம்பிக்கைகளைக் கடந்து சுற்றுச்சூழலைக் காக்க போராட வேண்டும். எதுவும் செய்யாவிட்டால், கொரோனா பெருந்தொற்று மனித வாழ்க்கையை எவ்வாறு பலவீனமானது என்பதை காட்டியிருக்கிறது. லட்சக்கணக்கான இந்தியர்கள் ஏற்கெனவே விளிம்புநிலையில் வாழ்ந்து வருகிறார்கள். சுற்றுச்சூழல் என்பது சுருக்கமான சாதாரண வார்த்தை அல்ல, அது மக்களின் வாழ்க்கை, வாழ்வாதார விஷயம். சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கையால் பரவலாக நீண்டகாலத்தில் சுற்றுச்சூழலில் பேரழிவுகளை நமக்கும், நம் சந்ததியினருக்கும் ஏற்படுத்தும், என கூறியுள்ளார். மேலும், வித்ட்ராஇஐஏ2020 என்ற ஹேஸ்டேக்கையும் ராகுல் காந்தி இந்த பதிவில் இணைத்துள்ளார்.



Tags : draft ,Rahul Gandhi ,EIA 2020 ,country , EIA 2020 draft, Rahul Gandhi, BJP Government
× RELATED சொல்லிட்டாங்க…