புதுச்சேரி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவு வகைகளை வழங்குவதற்கு புதுச்சேரி மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும், கொரோனா நோயாளிகளுக்கு செலவிடும் தொகையை 300 ரூபாயாக உயர்த்தி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தி வருகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில் தொற்று அறிகுறி உள்ளவர்கள், அரசின் தனிமைப்படுத்துதல் மையத்தில் வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கொரோனா நோயால் பாதிக்கப்படும் மக்களுக்கு, சரியான சிகிச்சை அளிப்பதிலும் மருத்துவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில், கொரோனா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவு வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. மேலும்,கொரோனா நோயாளிகளுக்கு செலவிடும் தொகையை ரூபாய் 300 ஆக உயர்த்தி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.