×

பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்புக்கு இன்று ரிசல்ட்: இணையதளம், எஸ்எம்எஸ் மூலம் தெரியும்

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு தேர்வுத்துறை வெளியிடுகிறது. மாணவர்கள் செல்போன் எண்ணுக்கும் உடனடியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பித்த ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்தான் இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வுக்காக இந்த ஆண்டு 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 10 ஆயிரத்து 742 பேரும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

சென்னையில் மட்டும் 49 ஆயிரத்து 369 பேர் விண்ணப்பித்தனர். புதுச்சேரியில் 299 பள்ளிகளை சேர்ந்த 16 ஆயிரத்து 521 பேர் விண்ணப்பித்தனர். இவர்கள் தவிர சிறைக் கைதிகள் 144 பேரும், 6,184 டிஸ்லெக்சியா உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளவர்களும் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்கள் யாரும் பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு எழுதாத நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இன்று காலை 9.30 மணிக்கு ரிசல்ட் இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்கள் பிறந்த தேதி மற்றும் பதிவு எண்களை இணைய தளத்தில் பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் மீதான குறைகள் இருந்தால் 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் தங்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம்.

* எந்த வெப்சைட்?
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in

Tags : examination ,Visible , Cancellation of General Examination, Class X, Today Result, Website, SMS
× RELATED நீட் அடிப்படை பயிற்சி தேர்வு...