திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோட்டயம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் வெள்ளத்தில் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மூணாறு பகுதியில் 40க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது கோட்டயம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவு முடங்கியுள்ளது. மேலும் கனமழை வெள்ளத்தால் பல இடங்களில் பாலங்கள், சாலைகள் உள்ளிட்டவை வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில் கனமழை வெள்ளம் காரணமாக இடுக்கி, வயநாடு, கோட்டயம் மற்றும் மூணாறு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்தோடுவதால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சாரையோரங்களில் முறிந்து விழுந்த ராட்சத மரங்களால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது கோட்டயம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 4 சக்கர வாகனம் ஒன்று சிக்கியுள்ளது. இதனையடுத்து காரை என்.டி.ஆர்.எஃப் மீட்பு படையினர் கயிறு கட்டி மீட்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, மீட்பு குழுவினருக்கு சிறப்பு உடைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீட்பு குழுவினர் கொரோனா நோயாளிகளை பத்திரமாக மீட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.