திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை மாநகரில் கொரோனா பாதிப்புகள் சற்று குறைந்துள்ள நிலையில் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வைரஸ் தொற்றானது அதிகளவில் பரவி வருகிறது. அதிலும் கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சிலரும் உயிர்கொல்லி கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவருடன் இருந்த கவுன்சிலர் கண்ணன் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எம்.எல்.ஏ பரமேஸ்வரி கடந்த ஒரு வார காலமாகவே உடல்நிலை சரி இல்லாத நிலையில் இருந்து வந்தார். இதனையடுத்து அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரிக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அதன் முடிவுகள் வெளியான நிலையில் தற்போது அவருக்கும் தொற்று உறுதியானது.
இதனையடுத்து இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் தற்போது மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்திற்கும் கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.