சென்னை: சென்னை துறைமுகத்தில் உள்ள அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்துவதற்கான இ-டெண்டரை சுங்கத்துறை வெளியிட்டுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் மர்மமாக வெடித்து சிதறியது. இதில் கட்டிடங்கள் நொறுங்கி நூற்றுக்கும் அதிகமானோர் பலியானார்கள். 5 ஆயிரம் பேர் மருத்துவமனையில் உள்ளனர்.
இதேபோல் சென்னை துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட்டால் விபத்து நடந்துவிடக்கூடாது என்ற அச்சம் சென்னை மக்களிடம் எழுந்தது.
இதையடுத்து, அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த மணலி துறைமுக பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், தீயணைப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வு முடிவில், 740 டன் அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்துவது தொடர்பாக 3 நாட்களுக்குள் இ டெண்டரை வௌியிட வேண்டும் என்று சுங்கத்துறைக்கு மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டது. இதையடுத்து, துறைமுக குடோனில் வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட் கெமிக்கலை அப்புறப்படுத்துவது தொடர்பான இ டெண்டரை சுங்கத்துறை நேற்று வெளியிட்டது. இந்த ஏல அறிவிப்பு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.