திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் பைலட், உதவி பைலட் உட்பட 18 பேர் பரிதாபமாக இறந்தனர். 162 ேபர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் துபாயில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் ‘வந்தே பாரத்’’ எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 184 பயணிகள், 2 பைலட் உட்பட 6 ஊழியர்கள் என 190 பேருடன் கோழிக்கோடு வந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் சுற்றுச்சுவரை இடித்து தள்ளி, 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் விமானம் இரண்டாக பிளந்தது. இதில், விபத்தில் பைலட் தீபக் வசந்த் சாத்ேத, உதவி பைலட் அகிலேஷ் குமார் உட்பட 18 பேர் பரிதாபமாக இறந்தனர். காயமடைந்த 162 ேபர் கோழிக்கோடு, மலப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலத்த மழையால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியதும், விமானிக்கு ஓடுபாதையை சரியாக பார்க்க முடியாததும் விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. விபத்தை தொடர்ந்து விமான நிலையம் மூடப்பட்டது. விமானங்கள் கண்ணூர் மற்றும் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன. விமான நிலையத்தை கேரள கவர்னர் ஆரீப் முகமதுகான், முதல்வர் பினராய் விஜயன், மத்திய அமைச்சர் முரளீதரன் உள்ளிட்டோர்நேற்று பார்வையிட்டனர். விபத்து இடத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘மழைதான் விபத்திற்கு காரணமாக இருந்திருக்க கூடும். விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்துள்ளது. இதில் இருந்து முக்கிய தகவல்கள் கிடைக்கும் என கருதுகிறோம். பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ₹5 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்,’’ என்றார். அதேபோல், கேரள முதல்வர் பினராய் விஜயனும், பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றார்.
இந்த விமான நிலையம் குன்றின் மேல் அமைந்துள்ளதால் ‘டேபிள் டாப் விமான நிலையம்’ என அழைக்கப்படுகிறது. இதன் ஓடுபாதை பாதுகாப்பானதல்ல என ஓராண்டுக்கு முன்பே விமான போக்குவரத்துத்துறை இயக்குநர் எச்சரித்தார். மழைக்காலத்தில் விமானங்களை தரையிறக்குவது மிகவும் கடினமாகும். ேமலும், ஓடுபாதையில் ரப்பர் கலவை அதிகமாக இருப்பதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கடிதம் எழுதியிருந்தார். ஓடுபாதையில் மழைநீரை வெளியேற்றவும் போதிய வசதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், காற்று வீசும் தன்மையை அறிவதற்கான கருவியும் செயல்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
1.ஓடுபாதையின் ஆரம்ப இடத்தில் இருந்து 1000 மீட்டர் தாண்டி, கிட்டத்தட்ட ஓடுபாதையின் நடுபகுதியில் விமானம் தரை இறங்குகிறது. 2.ஓடுபாதையில் இறங்கி செல்கிறது 3.மழை காரணமாக விமானம் வழுக்கிச் செல்கிறது 4. ஓடுபாதையில் இருந்து விலகி பள்ளத்தாக்கு பகுதியில் விழுகிறது 5. இரண்டாக பிளக்கிறது 6. இரண்டாக பிளந்த விமானத்தின் முன்பகுதி மோதியதில் சுற்றுச்சுவர் உடைகிறது.
தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உயிர் தப்பினர்
மலப்புரம் மாவட்ட கலெக்டர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘விமான விபத்தில் 18 பேர் இறந்துள்ளனர். 22 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. துபாய் சுற்றுலா சென்று ஊரடங்கால் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த முகமது பைசல் பாபு, ஷனிஜா பைசல் பாபு, ஷாஜஹான் ஆகிய 3 பேர் இந்த விமானத்தில் வந்தனர். இவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்,’’ என்றார்.