ஒகேனக்கல்: ஒகேனக்கல் அருகே சாலையோரம் முகாமிட்டுள்ள காட்டுயானைகள் அவ்வழியாக செல்பவர்களை துரத்தும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒகேனக்கல் அடுத்த பில்லிகுண்டு வனப்பகுதியில் உணவு தேடி வந்த 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையோரம் முகாமிட்டுள்ள. இதனையடுத்து பில்லிகுண்டுவிலிருந்து பென்னாகரம், ஒகேனக்கல் செல்லும் வாகனங்களை காட்டு யானைகள் துரத்துவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிர்களை சேதப்படுத்திய யானைகள் தற்போது பில்லிகுண்டுவிற்கு வந்திருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பகுதிகளில் அதிகளவு விவசாய நிலங்கள் உள்ளன. இதனால் விளைநிலங்களில் ஏராளமான காய்கறிகள், பயிர்கள் விளைவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் காட்டு யானைகள் அதனை சேதப்படுத்துவதற்குள் உடனடியாக விரட்டியடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.