மும்பை: பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவரது காதலியும், நடிகையுமான ரியா குற்றவாளி என்று முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரையுலகில் வேகமாக வளர்ந்து வந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். இந்த நிலையில் அவர், கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி மும்பையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சுஷாந்த் சிங் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து பீகார் போலீசார் இதுகுறித்தது விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரை செய்ததை தொடர்ந்து கடந்த புதன்கிழமை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து பீகார் போலீசார் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தனர். பின்னர், வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், சுஷாந்தின் காதலியான ரியாவிற்கு தற்கொலையில் தொடர்பு இருப்பதாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
மேலும் அவரது பெற்றோர், சகோதரர்கள் ஆகியோரும் கூட்டுசதியில் ஈடுபட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் எப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது குற்றச்சதி, தற்கொலைக்கு தூண்டியது, சட்டவிரோதமாக அடைத்து வைத்ததல், திருட்டு, நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல், சட்டவிரோதமாக அச்சுறுத்துதல் ஆகிய குற்றசாட்டுகள் ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சாட்டப்பட்டுள்ளது.