×

கர்நாடக அணைகளிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6000 கனஅடியாக உயர்வு

சேலம்: கர்நாடக அணைகளிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன்னர் கபினியில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு தற்போது 60 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு இந்த உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை ஒகேனக்கல் வந்தடைந்தது. இந்நிலையில் தற்போது கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளது. அடிபாலாற்றில் பெருக்கெடுத்து வரும் உபரி நீர் நுரைபொங்க வந்து கொண்டிருக்கிறது.

சில இடங்களில் மீனவர்களின் பரிசல்களையும், வலைகளையும் காவிரி நீர் இழுத்து சென்றுள்ளது. காடு மலைகளை கடந்து வரும் காவிரியில் பெரிய மரங்களும் அடித்து வரப்பட்டன. நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதால் செட்டிபட்டி, கோட்டையூர், பத்மாவாடி பரிசல் துறைகளில் பயணிகளை ஏற்றி செல்லும் படகு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கர்நாடக அணைகளில் உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்திருப்பதால் நீர்மட்டம் வேகமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 64.20 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 27.91 டி.எம்.சி.யாக உள்ளது.

ஈரோடு பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானி ஆற்றில் நாளை உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. நஞ்சை புளியம்பட்டி, டி.என்.பாளையம், அரசூர் உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



Tags : Mettur ,Karnataka ,Mettur Dam ,Kabini ,KRS , Mettur Dam, Kabini, K.R.S.
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி