×

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு

உத்திரமேரூர்: சென்னை-சேலம் எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்திரமேரூர் அருகே கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது விவசாயம்தான். இந்த தொழிலை நம்பிதான் பலர் உள்ளனர். இந்நிலையில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை- சேலம் 8 வழி பசுமை வழிச்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டது. இந்த சாலை சென்னையில் இருந்து சேலம் வரை 274 கி.மீ தூரத்தினை கொண்டது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்தில் மட்டும் சீத்தனஞ்சேரி, சாத்தனஞ்சேரி, மலையாங்குளம், புத்தளி, புலிவாய், மணல்மேடு, கருவேப்பம்பூண்டி, ஒழுகரை, சிலாம்பாக்கம், வெங்காரம், அனுமந்தண்டலம், மானாம்பதி, பெருநகர் உட்பட 20 கிராமங்கள் வழியாக அமைக்கப்படுகிறது.
இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் விவசாய கிணறுகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், கண்மாய், ஏரி, கால்வாய் என நீர்நிலைகள் மட்டுமின்றி வனப்பகுதிகள் என பல வகைகளில் பாதிப்படைக்கிறது. இதனால் கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த எட்டு வழிச்சாலைக்கு தடை விதிக்க கோரி விவசாயிகள் உட்பட தன்னார்வலர்கள் பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதில் நிலம் கையகப்படுத்த மத்திய, மாநில அரசுகளின் நில கையகப்படுத்தும் அறிவிப்பாணை செல்லாது என தீர்ப்பு வெளியானது.
இதையடுத்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஒரு சில நாட்களில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. உத்திரமேரூர் அடுத்த விசூர் கிராமத்திலும் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் நிர்வாகிகள் மூர்த்தி, வினோத் தலைமையில் விவசாயிகள் தங்களது நிலங்களில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

இதில், ‘எட்டு வழிச்சாலைக்கு எங்களது நிலத்தை தர மாட்டோம்’ என்றும் எட்டு வழிச்சாலை அமைக்க துடிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Chennai-Saleem ,protest ,Uthiramerur , Chennai, Salem, Eight Routes, Farmers Struggle, Uttiramerur
× RELATED 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு...