சென்னை: காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பொறியாளர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன், துணை தலைவர் பட்டாபிராமன், உதவி செயற்பொறியாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டம் தமிழக அரசு சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூட்ட அரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொறியாளர்கள் அனைவரும் திருச்சி மண்டல நீர்வளப்பிரிவில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்களில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உறுப்பினர் உட்பட அலுவலர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சிலர் தங்களை தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.