சென்னை: ஓட்டேரி புதிய வாழை மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலநாகேந்திரன் (31). 100% கண் பார்வை குறைபாடு உள்ள நிலையிலும் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார். இதுபற்றிய செய்தி நேற்று தினகரன் நாளிதழில் வெளியானது. இதனையடுத்து, அந்த மாணவரை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா அவரை நேரில் அழைத்து பாராட்டியதுடன் அவருக்கு பரிசுப் பொருள் கொடுத்து கவுரவித்தார். மேலும், புளியந்தோப்பு பகுதியில் பெரும்பாலான இளைஞர்கள் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவுடன் எந்த உயர்கல்வியை மேற்கொள்வது என்பது குறித்து பலவிதமான குழப்பத்துடன் இருப்பதாகவும், அடித்தட்டு மக்கள் அதிகம் வாழும் இந்தப் பகுதியில் இளைஞர்கள் சிலர் தவறான பாதையில் செல்வதாகவும் கூறி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வகுப்பு எடுக்க வேண்டும் என துணை கமிஷனர் கேட்டுக்கொண்டார். மேலும், அதற்கு உண்டான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாகக் கூறினார். அதன்பேரில் விரைவில் புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் புதிதாக ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பாலநாகேந்திரன் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புக்களை எடுக்க உள்ளார்.