ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் படித்து வருகிறார்கள். இதில் இறுதி ஆண்டு படித்து முடித்த மாணவர்கள் சென்னை வர முடியாமல் தவித்து வந்தார்கள். இது குறித்து பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அவர் ஏற்பாடு செய்த விமானத்தில் தமிழக மாணவர்கள் 200 பேர் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை வந்து சேர்ந்தனர். அவர்கள் தி.நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து சென்னையை சேர்ந்த மாணவி ஷக்தி பிரியதர்ஷினி கூறும்போது, ‘நாங்கள் இறுதியாண்டு படித்து முடித்துவிட்டு பட்டமும் வாங்கி விட்டோம். ஆனால் நாடு திரும்ப முடியாமல் விடுதிகளிலேயே இருந்தோம். இதுகுறித்து நடிகர் சோனுசூட்டுக்கு மெயில் அனுப்பினோம். அவர் எங்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு நான் விமானம் ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம் என்று எங்களை தைரியப்படுத்தி, உதவினார்’ என்றார்.