×

கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் தலைநகர் சென்னை: பொதுமக்கள் சற்று ஆறுதல்

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஆயிரக்கணக்கான தெருக்கள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் தடை செய்யப்பட தெருக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. தமிழகத்திலலேயே கொரோனா பாதிப்புகள் அதிகம் கொண்ட பகுதியாக தலைநகர் சென்னை உள்ள நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது சென்னை வாசிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான தெருக்கள் தடை செய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்போது தடை செய்யப்பட தெருக்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. இதுவே கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை காட்டும் வகையில் அமைந்துள்ளது. சென்னையில் மொத்தமாக 37, 537 தெருக்கள் உள்ளன. இதில் 9,509 தெருக்களில் கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆரம்ப காலத்தில் ஒரு தெருவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலே அந்த தெருக்களை தடை செய்யப்பட பகுதியாக அறிவித்து முற்றிலும் பொதுமக்கள் வெளியே வராத படி மாநகராட்சியினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது 5  நபர்களுக்கும் குறையாமல் கொரோனா பாதிப்பு இருக்கும் தெருக்களை தடை செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களாக 813 தெருக்கள் தடை செய்யப்பட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியதால் தற்போது மாநகராட்சியில் 24 தெருக்கள் மட்டுமே தடை செய்யப்பட தெருக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையை பொறுத்தவரை மொத்தம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சுமார் 11 ஆயிரத்து 800 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பின் ஆரம்ப கட்டத்திலேயே தெருக்களை தடை செய்து பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வெளியே வராதபடி தடுத்ததன் காரணமாகவே கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.


Tags : capital ,Chennai , கொரோனா, தலைநகர் சென்னை, பொதுமக்கள், சற்று ஆறுதல்
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...