மதுரை:மதுரை மாநகராட்சி நீச்சல்குளம் எதிரில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மிகப் பழமையான வேப்ப மரத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சி நீச்சல்குளம் எதிரில், டாக்டர் தங்கராஜ் சாலையில், கால்நடை பராமரிப்புத்துறை மதுரை மண்டல இணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நுழைவு வாயிலில் உள்ள மிகப் பழமையான வேப்ப மரம், எப்போதும் விழுந்து விடுமோ என்ற அபாயகரமான நிலையில் உள்ளது.இவ்வழியாகத்தான் தினமும் ஆயிரக்கணக்கில் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் வருவர். மேலும், இவ்வழியாக இரு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், மரம் விழுந்து பெரும் ஆபத்தை உருவாக்கி விடுமோ என உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டியது உள்ளது.
இந்த வேப்ப மரம் ஏன் அகற்றப்படாமல் உள்ளது என விசாரித்த போது, “கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தின் வளாகம் முழுவதும் பொதுப்பணித்துறையினரின் பராமரிப்பு கட்டுப்பாட்டில் வருவது தெரிந்தது.இந்த அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வருவதாலும், அலுவலக பணியாளர்கள் வருவதாலும், தற்போது ஆடிக்காற்று பலமாக வீசும் காலம் என்பதாலும், ஏதேனும் மிகப்பெரிய விபரீதங்கள் ஏற்படும் முன்பு, பொதுப்பணித்துறையினர் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் பொதுப்பணித்துறையினர், ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இந்த பேப்ப மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என கால்நடைகளை சிகிச்சைக்கு கொண்டு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.