தர்மபுரி: தர்மபுரி-சேலம் சாலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. தினசரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 800க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனை வளாகத்தில், தற்போது கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு தனியாக இயங்கி வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதால், அரசு மருத்துவமனைக்குள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வெளியே வாகனங்களை நிறுத்தி விட்டு, கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்துவிட்டு, முக கவசத்துடன் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.
மேலும் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு, சோப்பினால் கைகளை கழுவி விட்டு செல்லவும் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது. தற்போது எந்தவித வசதிகளும் இல்லை. இதனால், வெளியில் இருந்து, அரசு மருத்துவமனைக்குள் சிகிச்சைக்கு செல்லும் பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், கொரோனா தொற்று தடுக்கும் வகையில் தண்ணீருடன் சோப்பு வசதி, கிருமிநாசினி தெளிக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.