சென்னை : வரலாற்று நாயகன் ராமருக்கு அயோத்தியில் ஆலயம், பிரதமர் மோடி அவர்களின் சரித்திர சாதனை என்று புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர்.ஏ.சி.சண்முகம் வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர்.ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வரலாற்று நாயகன் ராமருக்கு, அவர் அவதரித்த அயோத்தியில் 500 வருட காத்திருப்பிற்கு பிறகு, வானுயர கோபுரங்களுடன் திருக்கோயில் கட்ட, அடிக்கல் நாட்டப்படுவது ஒட்டுமொத்த இந்தியர்கள், அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இன்று ராமர் கோவில் கட்டப்படவிருக்கின்றது, உலக வரலாற்றில் நீண்ட காலம் நடைபெற்ற அறவழி போராட்டத்தில், யாருக்கும் இழப்பின்றி சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது. அயோத்தியில் நில பிரச்சனையில் உரிமை கோரி வழக்கு தொடர்ந்தவர்களின் வாரிசும் விழாவில் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கது.
யாராலும் தீர்வு காண முடியாது என்று சொல்லப்பட்ட இந்த பிரச்னையில் சுமூக தீர்வுகண்டு வரலாற்று சாதனையை நிகழ்த்தி காட்டிய பிரதமர் மோடி அவர்களை ஒட்டுமொத்த இந்தியாவே பாராட்டி மகிழ்கின்றது. நல்லரசு நாடான இந்தியாவை வல்லரசு நாடாகவும் மாற்றி காட்டிய மோடி அவர்களுக்கு புதிய நீதிக்கட்சியின் சார்பில் பாராட்டுகளையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவிக்கப்பட்டுள்ளது.